search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ஆதார் அட்டை"

    திருப்பூரில் வங்காள தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த பீகார் வாலிபரை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் வங்காள தேசத்தை சேர்ந்த சிலர் போலி ஆதார் அட்டையுடன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது திருப்பூர் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் தங்கி இருந்த அலமின் (24), அஸ்ரபுல் இஸ்லாம் (31), பர்கத் உசேன் உள்பட 8 வங்காள தேச வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து உதவியதாக ராம்சிஷ் வர்மா, சவரி முத்து, ரவிசங்கர் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் ராம்சிஷ் வர்மாவிடம் இருந்து லேப் டாப், கருவிழி, கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி, 9 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்களுக்கு உடந்தையாக இருந்த பீகார் வாலிபர் மிதுன்ஷா (27) தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் தலைமையில் இயங்கி வந்தனர். அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மிதுன்ஷா பீகார் மாநிலம் நவதா மாவட்டம் சத்துவா பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படையினர் பீகார் சென்று மிதுன்ஷாவை கைது செய்தனர். அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்

    அப்போது மிதுன்ஷா ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராம்சிஷ் வர்மாவுடன் சேர்ந்து பீகாரில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.

    பின்னர் அவினாசியில் 3 மாதம் தங்கி போலி ஆதார் அட்டை தயாரித்துள்ளார். அப்போது தான் இவரிடம் வங்காள தேச வாலிபர்கள் போலியாக ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து உள்ளதாக மிதுன்ஷா தெரிவித்து உள்ளார். அந்த தகவல்களை அவர் கம்ப்யூட்டரில் வைத்துள்ளார். அதற்கு பாஸ்வேர்டு போட்டு உள்ளார்.

    அதனை திறந்து பார்த்தால் தான் மிதுன்ஷா எத்தனை பேருக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட மிதுன்ஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பெங்களூரு ஆதார் கார்டு வினியோகத்துக்கான மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனினும் கைது செய்யப்பட்ட மிதுன்ஷாவிடம் விசாரணை நடத்த உள்ளார். #tamilnews
    திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து கொடுத்ததாக பீகார் வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Aadhaarcard

    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

    ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து ராம்சிஷ் வர்மாவை பிடிக்க திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர். போலீசார் வருவதை அறிந்த ராம்சிஷ் வர்மா தலைமறைவாகி விட்டார்.

    அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படையினர் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப் -டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவிகளை போலீசார் கைப்பற்றினார்கள்.

    ராம்சிஷ் வர்மாவுக்கு வீடுபார்த்து கொடுத்து உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரி முத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    ராம்சிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த போது கொடுத்த ஐ.டி.யில் இருந்து அவினாசியில் போலி ஆதார் அட்டை அச்சடித்து கொடுத்தது தெரிய வந்தது.

     


    அவர் திருப்பூர் மற்றும் பீகாரில் 500-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆதார் அட்டைகளை அச்சடித்து வினியோகித்து இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது.

    திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிக அளவில் உள்ளது. கடந்த 2 வருடங்களாக திருப்பூரில் தங்கி இருந்த ராம்சிஷ் வர்மா பலருக்கும் உதவி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.அவருக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராம்சிஷ் வர்மாவிடம் போலி ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள் திருப்பூரில் எங்கெங்கு தங்கி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ராம்சிஷ் வர்மா வினியோகித்துள்ள ஆதார் அட்டைகள் அரசின் சர்வரில் இணைக்கப்பட்டு பெறப்பட்டதா? என்பது குறித்து மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனின் நேற்று 2-வது நாளாக திருப்பூரில் விசாரணை நடத்தினார்.

    இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் கூறும் போது, பெங்களூருவில் இருந்து வந்த ஆதார் துணை இயக்குனர் திருப்பூரில் 2 நாட்கள் விசாரணை நடத்தி சென்று உள்ளார்.

    கைதான பீகார் வாலிபர் எந்தெந்த குறியீடுகளில் இருந்து ஆதார் பதிவு செய்துள்ளார் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது. முழுமையான தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த வி‌ஷயத்தில் முழு எண்ணிக்கை தெரிய வரும் என்றார். #Aadhaarcard

    திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுக்க உதவிய புரோக்கரை கைது செய்த போலீசார் ஜார்க்கண்ட் வாலிபரை தேடி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமத் தோட்டத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்கதேச வாலிபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் போலி ஆதார் கார்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்தது.

    கைதான 8 பேரிடம் விசாரித்த போது திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசியில் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வர்மா என்பவர் தான்போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து புரோக்கர் மற்றும் வர்மாவை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வர்மா ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டார்.

    இந்த நிலையில் புரோக்கர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது திருப்பூரில் தங்கி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வர்மாதான் போலி ஆதார் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தயார் செய்து கொடுத்ததாக கூறினார்.

    இதனை தொடர்ந்து வர்மாவை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.

    வர்மாவை பிடித்து அவர் வைத்துள்ள கம்ப்யூட்டரை சோதனை செய்தால் தான் அவர் எத்தனை பேருக்கு போலியாக ஆதார், அடையாள அட்டை தயாரித்து கொடுத்தார் என்பது தெரிய வரும். #tamilnews
    ×